மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய வ

31/1/2021

0 Comments

 
Picture
வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) அவர்களின் தலைமையில் தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று முந்தினம்  (29.01.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மயிலிட்டித்துறை கிராமம் மீள்குடியேற்றத்தின் பின்னர் எதிர்நோக்கிவரும் கீழ்வரும் பிரச்சினைகள் குறித்து, வலிவடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் மற்றும் மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா.மயூதரன் ஆகியோர் பங்கேற்று எடுத்துக்கூறியிருந்தனர்.

மீள்குடியேற்ற விடயம், காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது வலிவடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் அவர்கள் அது தொடர்பில் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

தொடர்ந்து மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா.மயூதரனால் கீழ்வரும் விடயங்கள் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டிருந்தது.

• மயிலிட்டித்துறை மீன்பிடித்துறைமுக விடயம்....

முப்பது வருட இடப்பெயர்வு காலம் மற்றும் சுனாமி பாதிப்பு என்பவற்றால் சிதைவடைந்திருந்த மயிலிட்டித்துறை துறைமுகத்தை புனரமைத்து மயிலிட்டி மக்களிடம் 1990 இற்கு முன்னர் இருந்தவாறு கையளிப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் தொடங்கப்பட்ட முதற்கட்ட புனரமைப்பு பணிகளின் பின்னர் மீன்பிடித் துறைமுகங்கள் அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டு மண்ணின் மைந்தர்களான மயிலிட்டித்துறை மக்கள் புறக்கணிக்கப்பட்டதுடன் சந்தித்துவரும் நெருக்கடி நிலை குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டிருந்தது.

மீன்பிடித்துறையில் பெரும் சாதனைகளை செய்து இலங்கையின் மீன்பிடித்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக மயிலிட்டித்துறை மக்களுக்காக கட்டப்பட்டதே மயிலிட்டி மீன்பிடித்துறைமுகமாகும். 1990 இற்கு முன்னர் முற்றிலும் மயிலிட்டி மக்களுக்கு சொந்தமான சுமார் 120 இற்கு மேற்பட்ட வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடிக்கலங்களினால் நிறைந்திருந்தது.

முப்பது வருட கால இடப்பெயர்வு காரணமாக எமது மக்களில் பெரும்பாலானவர்கள் நலிவடைந்த நிலையில் காணப்படுவதால் உடனடியாக பெருந்தொழிலை செய்யாமுடியாதுள்ளது. ஆனால் காலப்போக்கில் எம்மால் பழைய நிலைக்கு மீண்டுவர முடியும். ஆகவே மயிலிட்டித்துறைமுகம் மயிலிட்டி மக்களுக்கே உரித்தானதாக இருக்க வேண்டும்.

இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதுடன் மயிலிட்டித்துறை மீனவர்களுக்கு என்றென்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் மீன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க மயிலிட்டித்துறை வடக்கு பகுதியில் செயற்பட்டு வரும் சமூகமட்ட அமைப்புகள் சார்பில் அனுமதிக்கப்போவதில்லை என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டு மயிலிட்டி மக்களிடம் வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தாலும் பின்னர் மீன்பிடித்துறைமுகங்கள் அதிகார சபையினரிடம் கையளிக்கப்பட்ட விடயத்தையும், துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்வகிக்கும் உரிமை, க.தொ.கூ.சங்கம் இயங்குவதற்கு அலுவலகம், சிற்றுண்டிச்சாலை, மீன்பிடி உபகரண விற்பனை நிலையம் உள்ளிட்டவை மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க நிர்வாத்திடம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டமை உண்மை என வலிவடக்கு பிரதேச செயலாளர் ச.சிவசிறி அவர்கள் சபையினர் முன்னிலையில் எடுத்துக்கூறியிருந்தார்.

பிரதேச செயலாளரின் கருத்தை, வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த ரங்கன் ஆகியோரும் ஆமோதித்திருந்திருந்தனர்.

இதையடுத்து மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவர்களுக்கு விடயங்களை தெரியப்படுத்தி அமைச்சர் தலைமையில் மயிலிட்டித்துறை மக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய தரப்பினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு வலிவடக்கு பிரதேச செயலாளர் ச.சிவசிறி அவர்களை நிகழ்வின் தலைவர் அங்கஜன் இராமநாதன் பணித்திருந்தார்.

அத்துடன் மேற்குறித்த விடயத்தில் கலந்துரையாடப்பட்டு உள்ளூர் மக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

• கரையோரப்பகுதி கடலரிப்பு தொடர்பில்...

மயிலித்துறை கிராமத்தின் கரையோரம் கடந்த முப்பது வருட இடப்பெயர்வு காலம் மற்றும் சுனாமி பாதிப்பு என்பவற்றால் கடலரிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

பலரது காணிகள் கூட கலரிப்பால் இல்லாமல் போயுள்ளது. துறைமுக ஆழப்படுத்தும் பணியில் அகழப்பட்ட மணல் மற்றும் கற்களைக் கொண்டு ஓரளவு பகுதி நிரவப்பட்டிருந்தது.

அதையேனும் பாதுகாப்பதற்கு 'கருங்கல் படுக்கையிலான தடுப்பணை' ஒன்றை அமைத்து தருமாறும் இல்லையேல் அதுவும் கடலரிப்பில் மீளவும் இல்லாமல் போய்விடும் என பிரதேச, மாவட்ட மட்ட அதிகாரிகளிடம் முன்னர் வலியுறுத்தியிருந்தமை குறித்தும்,

அண்மையில் ஏற்பட்ட நிவர், புரேவி புயல் பாதிப்பு, மாரிகால கடலரிப்பு என்பவற்றால் திரும்பவும் கடலரிப்புக்கு உள்ளாகி இருந்ததும் இல்லாமல் போய்விட்டது.

ஆகவே எமது இருப்பை பாதுகாக்க கரையோரப்பகுதியில் 'கருங்கல் படுக்கை தடுப்பணை' அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா.மயூதரனால் வலியுறுத்திக் கூறப்பட்டது.

அது தொடர்பில் மேல் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அன்றைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

• வைத்தியசாலை அமைப்பது தொடர்பில்...

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க வேண்டிய தேவைப்பாடு குறித்து வலிவடக்கு பிரதேச செயலாளர் ச.சிவசிறி அவர்கள் முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

இது குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி கருத்துக் கூறும்போது வளலாய், பலாலி, மயிலிட்டி, தையிட்டி ஊறணி, காங்கேசந்துறை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற வைத்தியசாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அதனை ஆமோதித்த பிரதேச செயலாளர் மயிலிட்டியில் சுகாதார அமைச்சுக்குரிய காணி (கசநோய் வைத்தியசாலை இயங்கிய இடம்) இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்விடயம் குறித்து எமது மக்களின் சார்பில் கருத்துரைக்கும் போது,
மயிலிட்டியில் கச நோய் மருத்துவமனை உருவாக்கப்பட்டபோது இருந்த சூழல், பின்னணி எவ்வாறு என்பது தெரியாது. ஆனால் தற்காலத்தில் அவ்விடத்தில் மீண்டும் கசநோய் மருத்துவமனை அமைப்பது பொருத்தமில்லை.

முப்பது வருட இடப்பெயர்வு காலத்தில் மூன்று தலைமுறைகள் உருவாகியுள்ள பின்னணியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்டதாக மயிலிட்டித்துறை மாறியுள்ளது. மீள்குடியேற்றம் நிறைவடையும் போது மிகவும் சன அடர்த்திகொண்ட கிராமமாக மாறும்.

அப்போது அங்கு கச நோய் மருத்துவமனை அமைவது பொருத்தமில்லாத விடயமாகும்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த காணி விடுவிக்கப்பட்ட பின்பு அங்கு ஏற்கனவே இருந்தது போன்று கச நோய் மருத்துவமனையை கொண்டு வரவேண்டும் என்று வட மாகாண சுகாதாரத் தரப்பினரிடையே வலுவாக உரையாடப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

நாங்கள் பாமர மக்கள். அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எம்மால் அறிய முடியாது. அவர்கள் முடிவெடுத்து அடிக்கல் நாட்ட வரும்போதுதான் எமக்கு விடயங்கள் தெரியவரும்.

ஆகவே மீண்டும் அவ்விடத்தில் கச நோய் மருத்துவமனை அமைப்பது பொருத்தமில்லை. அது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் குறித்த காணியில் அவசர நோயாளார் வாகனம் உள்ளடங்கிய வைத்திய நிலையம் ஒன்றை அமைப்பது மிகவும் அவசியம்.

அண்மையில் மாரடைப்பு காரணமாக சிவானந்தவேல் என்பவர் உயிரிழந்திருந்தார். சரியான போக்குவரத்து வசதியோ, அவசர நோயாளர்காவு வாகன வசதியுடன் ஒரு வைத்தியசாலை அருகில் இருந்திருந்தால் அவரை சிலவேளை காப்பாற்றியிருக்க முடியும் என்ற ஆதங்கம் அந்த குடும்பத்திற்கு இப்போதும் உள்ளது.

இவ்வாறு ஒரு எமது பிரதேசத்தில் திரும்பவும் நிகழாமல் இருக்க வேண்டுமாயின் குறித்த காணியில் அவசர நோயாளர்காவு வாகன வசதியுடன் கூடிய வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா.மயூதரனால் எடுத்துக்கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்திருந்த தெல்லிப்பளை பொதுச்சுகாதார பரிசோதகர், இனிமேல் கச நோய் வைத்தியசாலை அமைக்கும் திட்டமெதுவும் இல்லையென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்

இதையடுத்து வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரான சஜீவன் கருத்துத்தெரிவிக்கையில், குறித்த காணி பெரிய அளவில் இருப்பதால் வைத்தியசாலையுடன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையம் ஒன்றை அமைப்பதற்கு சிபாரிசு செய்யலாம். வடக்கு மாகாணத்தில் இனம்காணப்படும் அவ்வாறானவர்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிவருவதை எதிர்காலத்தில் தவிர்த்து இங்கேயே அனுமதித்து சிகிச்சையளிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் பிரதேச செயலாளருடன் உரையாடிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் சுகாதார அமைச்சின் தொடர்புடைய தரப்பிற்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார்.

• அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயத்திற்கான கரையோரப் பாதுகாப்பு அனுமதி தொடர்பில்...

மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயத்திற்கான கடலோரப்பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி தொடர்பான விடயம் உரிய திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளது.

குறித்த விடயத்தை வலிவடக்கு பிரதேச செயலாளர் ச.சிவசிறி அவர்கள் கரிசனையுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெறச்செய்து மேல் நடவடிக்கைக்கு நகர்த்தியுள்ளமையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

குறித்த ஒருங்கிணைப்புக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மயிலிடித்துறை சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதுடன், அவ்விடயங்களில் கூடுதலான அக்கறையினை கொண்டிருக்கும் வலிவடக்கு பிரதேச செயலாளர் ச.சிவசிறி அவர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் மயிலிட்டித்துறை மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் நேற்று முந்தினம் (29.01.2021) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகிய தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலகர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீ, தெல்லிப்பளை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச சபை தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமத்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், கௌரவ தெல்லிப்பளை பிரதேசசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் என பலதரப்பினரின் பங்கேற்புடன் பிரதேச செயலகத்தில் Covid - 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பக்கம் best free website hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி செய்திகள்

     

    பதிவுகள்

    August 2021
    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023