• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 42 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

7/6/2024

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 42 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

இறைவனோடு இரண்டறக் கலப்பது இன்பம்
“இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவிக்குத் தொழில்பல எண்ணினும்
அன்பில் கலவிசெய்து ஆதிப்பிரான் வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே”                               பாடல் எண் 281  

இவ்வுலக வாழ்வில் ஆன்மாக்கள் இன்பம் எய்தி இருக்கப் பல வழிமுறைகள் வகுத்து வைத்துள்ளான் இறைவன். என்றாலும் வாழ்வு துன்பம் நிறைந்ததாயுள்ளது. இதற்குக் காரணமான வினைத் தொடர்புகளும் பலவாக உள்ளன. எனவே ஆதியான பரம்பொருளோடு அன்பினால் இரண்டறக் கலக்கும் உயிர்களுக்கு, இறைவன் முன்பு தந்த இந்தப் பிறவி முடிவடையும். இனிப் பிறவி இல்லையாகும்.

Picture
துன்ப வலை அறத் துதியுங்கள் பரமனை
“அன்புறு சிந்தையின் மேல்எழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந்தொடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே”                              பாடல் எண் 282

உள்ளன்பு கொண்டு பணிவோர் உள்ளத்தில் ஓங்கி ஒளி செய்யும் சோதிச் சிவ ஒளி, உயிர்களுக்குப் பேரின்பப் பெரு வாழ்வு தர விரும்பி, அருட் பார்வை கொண்ட திருவிழிகள் உடைய பராசக்தியுடன் சேர்ந்து, அருள் புரியத் திருவுளம் கொள்ளும். அதனால் ஆன்மாக்களைச் சிக்க வைத்துத் துன்பம் தரும் ஐம்புலன் இச்சைகளாகிய வலைகள் அறுபட்டுப் போகும். எனவே நேச நினைவோடு ஈசனை நீங்கள் தேடி உய்யுங்கள்.

பேரின்பம் இது
“புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லார்க்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அனைத்தலும் இன்பம் அதுஇது வாமே”                          பாடல் எண் 283

பெண்களோடு கூடி மகிழுகையில், அப் பெண்கள் மேல் கொள்ளுகிற அன்பைப் போல, உள்ளமும் உணர்வும் உடலும் ஓர் உணர்வில் ஓன்றிக் கலக்கத், தன்னை மறந்து சிவ சிந்தனையில் ஈடுபடக் கூடியவர்களுக்குத், தன்னை மறந்த, தன்னுணர்வு மறந்து இறையருளுடன் இரண்டறக் கலந்து, கூடிக் களித்துப் பேரின்பப் பெருவெளியில் நீந்தித் திளைத்திருக்கும் நிறைவு கிட்டும். ( முன்னே சொன்னது உடல் அடையும் சிற்றின்பம், பின்னது உயிர் உய்த்து மகிழும் குகானுபவம் – பேரின்பம்.)

பத்தருக்கே அருள்வான் பரமன்
“உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்துஅறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்துஅடி யார்தொழ
முத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே”                        பாடல் எண் 284

தவயோகத்தில் ஈடுபட்டுள்ள தவயோகிகள், கலந்திருக்கின்ற சித்துகளில் வல்லவர்களாகிய சித்தர்கள்கூட, ஒளிச் சுடரான பரம்பொருளை எப்போதும் எளிதாக உணர்ந்தறிந்து கொண்டாரில்லை. ஆனால் சித்தர்கள் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிவப்பரம்பொருள், உள்ளன்போடு பணிந்து பரவும் அடியவர்கள் துதித்தவுடன், அவர்களுக்கு அருள் புரிய அவர்கள் முன் தோன்றுவான். (சித்து வேலைகளில் நாட்டமுள்ளவர்களுக்கு சிவ சிந்தனை குறைவு என்பதைக் காட்டவே சித்தர்கள் என்றும் தெரிந்தறிவாரில்லை எனக் கூறியுள்ளார்)

திருவடிக் காட்சி
“கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழல்இணை
கண்டேன் கமல மலர்உறை வான்அடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே”                        பாடல் எண் 285

கண்குளிரக் கண்டேன், வாசம் வீசும், கொன்றை மலர்மாலை சூடிய பரமன் திருவடிகளை, கண்களால் கண்டு களித்தேன், யானைத்தோல் உடை அணிந்த அரன் அழகிய திருவடிகள் இரண்டை. என் உள்ளமாகிய தாமரை மலரில் வாழ்கின்ற உண்மைப் பொருளை என் அகக்கண் கொண்டு கண்டேன்! இத்தனை அருட் காட்சிகளையும், நான் என் உள்ளத்தில் – மனதில் அவனிடம் செலுத்திய அன்பாலே அடையப் பெற்றேன். அவன் திருவடித் துணை பெற்றேன்.

அறிதற்கு அரியவன்
“நம்பனை நானா விதப்பொருள் ஆகுமென்(று)
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்(று) இரதிக்கும்
அன்பனை யாரும் அறியுகி லாரே”                               பாடல் எண் 286

நம்பும் அடியவர்களுக்கு நன்மை அருளுபவனை, அண்ட சராசரம் அனைத்திலும் உள்ள எல்லாப் பொருளும் அச்சிவபெருமானே என்று, வானுலகத் தேவர்களும் வணங்கித் துதிக்கும் தேவர் தலைவனை – தேவாதி தேவனை, இன்ப உருவானவனை, அன்பர் மனம் அடையும் இன்பத்துள் நின்று இனிக்கின்ற அன்புருவானவனை, எவரும் முழுதும் அறிந்திலர். (எவராலும் அறிந்தறியா, அளந்தறியா ஆற்றல் உடையவன்)

பிறவா இறவாப் பெருமான் நந்தி
“முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோமென்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே”                                                                                பாடல் எண் 287

முன் பிறப்பும், தொடரும் இறப்பும் அறியாதவர்கள் அன்பில் இறைவனை அறிவோம் என்பார்கள். நந்தியெம் பெருமான் இன்பத்திற்கு இலக்கான பிறப்பும் இறப்பும் இல்லாதவன். அவனை அன்பு மனம் கொண்டு வழிபட்டுப், பிறப்பு இறப்பை போக்கிக் கொள்ளத் தெரியாதவர்களாக இந்த மனிதர்கள் இருக்கின்றார்களே!
​
இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்​

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    March 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.