மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

திருமந்திரம் - பாகம் 34 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/11/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 34 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே”                                          பாடல் 225
​
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.

Picture
மறைப்பொருளை உணர்ந்தவர்
“காயத் திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்குஉன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே”                                         பாடல் 226

உமாதேவியின் (காயத்திரி - மந்திரம், பார்வதி) அருளைப் பெற விரும்புவோர் சூரியனை வணங்கி சாவித்திரி (சரஸ்வதி, சூரியனை எண்ணிச் சொல்லும் மந்திரம்) மந்திரம் செபிப்பர். இப்படி இவர்கள் இறைவன் மேல் கொண்ட நினைவால், பக்தி என்னும் தேர் ஏறிப் பரமன் அன்பால் மாய உலகின் மலங்களில் ஆழ்ந்து விடாது இருப்பார்கள். இவர்களே மறைப்பொருளை உணர்ந்தவர் (மறை ஓதுபவர்) ஆவார்.

ஓம்” என்னும் மந்திரம் ஓதுக நாளும்
“பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யால்உரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை இருந்து
சொருபமது ஆனோர் துகள்இல்பார்ப் பாரே”                                       பாடல் 227

பேரின்பப் பேறு அடைவதற்கு உரிய சிறந்த வழியான பிரணவ மந்திரத்தை மனத்தில் எண்ணித் துதித்து, ஆச்சாரியனாகிய ஞான குருவின் வழிகாட்டுதலின்படி, அவர் உபதேசித்த மந்திரத்தைச் சொல்லி, உயர்ந்த தவமார்க்கமாகிய தியானத்தில் இருந்து, சிவடிவமாகவே விளங்கப்பெறுபவர்கள் குறையற்ற பார்ப்பனர் ஆவார்கள்.

புலனை அடக்கப் பிரமம் ஆகலாம்
“சத்தியமும் தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிருடல் உண்டாய் உணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே”                                             பாடல் 228 

அழிவற்ற சத்தியமும் உண்மைப் பொருளும் மெய்த்தவமும் பரம்பொருளே ஆதலால், தாம் நினைத்தபடி சென்று, துன்பத்தைத் தேடித்தரும் ஐம்புலன்களையும் அடக்கி, உணர்வோடும் நினைவோடும், உயிர் உள்ள போதே, வினைத் துயர் நீங்கப் பந்த பாசங்களை விட்டொழித்தவர் பிரமம்  ஆவார்.

பாசம் அகற்றுதல் பரம்பொருள் ஞானம்
“வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட் டாரே”                                 பாடல் 229

வேதாந்த ஞானம் என்றால் என்ன என்பதை அறிய விரும்பிய வேதியர்கள், வேதாந்த ஞானத்தைக் கேட்டறிந்த பின்னரும், தங்கள் ஆசைகளை, பற்றை விடவில்லை. வேதத்தின் முடிவான வேதாந்தம் என்பது, ஆசைகள் அறுந்த இடம். பற்றுக்கள் விட்ட இடம். எனவே உண்மையாகவே வேதாந்த ஞானம் பெற்றவர்கள் என்று சொல்லப்படும் பெருமைக்கு உரியவர்கள், ஆசையை விட்டவர்களே.
 
மறைப்பொருள் உணர்க மறையவராக
“நூலும் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காண நுவலிலே”                                  பாடல் 230

பூநூல் அணிந்திருக்கின்ற, குடுமி வைத்துள்ள ஒருவரைப் பிரமத்தை அறிந்தவர், பிராமணர் என்று சொல்லிவிட முடியுமா? நூல் என்பது பருத்திப் பஞ்சாலான மெல்லிய இழை. நுண்சிகை என்பது தலைமுடி. உண்மையில் நூல் என்பது மறைப் பொருள் உணருதல், நுண்சிகை ஞானமார்க்கம். (முப்புரி நூல் என்பதற்கு இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்றும், நுண்சிகை உச்சித்தலை, புருவநடு என்ற பொருளும் உண்டு) நூலணிந்த மறையவர்கள் இங்கே சொல்லியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மெய்ப்பொருள் உணர்க மேன்மக்கள் ஆக
“சத்தியம் இன்றித் தனிஞானம் தான்இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிஊண்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே”                             பாடல் 231
​
உண்மைத் தவ ஒழுக்கம் இல்லாமல், மெஞ்ஞான அறிவும் இல்லாது, உடலோடும், மனத்தோடும் பொருந்தியுள்ள ஐம்புலன்கள் வழிச் செல்லும் ஆசையை விட்டு விலகும் வழியை எண்ணும் நினைப்பும் இல்லாமல், பக்தி இல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலான ஒன்று பரம்பொருள் என்ற உண்மை அறிவும் இல்லாமல், உண்ணும் உணவில் ஆசை வைத்து அலையும் பைத்தியக்காரர்கள் பிராமணர் ஆகமாட்டார்கள்.
​


இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்​

    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    March 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023